Saturday, January 31, 2009

சிங்கள வீரவிதான: பாசிசம் ஜாக்கிரதை!

என்.சரவணன்

”தேசிய இயக்கத்தில் பாசிசப் போக்கு வரத்தொடங்கியுள்ளது...”


இவ்வாறு கூறியவர் வேறு யாருமல்ல சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு கோட்பாட்டு உருவம் கொடுப்பதில் பெரும் பங்கு வகித்து வந்தவரும் ”ஜாதிக்க சிந்தனைய” அமைப்பின் தலைவருமான நளின் டி சில்வா தான். திவய்ன பத்திரிகையில் தான் தொடர்ந்து எழுதி வரும் பத்தியில் (16 மே 1999) சிங்கள வீரவிதான பற்றி அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

”வீரவிதானவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஒரு சிங்கள பௌத்த பாசிஸ்ட்”

இதனைக் கூறியவர் அமைச்சர் மங்கள சமரவீர கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரு கூற்றுக்களையும், அதனைக் கூறியவர்களையும் கவனமாகப் பாருங்கள். முன்னையவர் சிங்கள பௌத்த பேரினவாத வெறிக்கு சித்தாந்த வடிவம் கொடுப்பதில் முன்னின்று வருபவர். இரண்டாமவர் சிங்கள பௌத்த அரச கட்டமைப்புக்கு தற்போது தலைமை ஏற்றிருக்கும் அரசாங்கத்­தின் தற்போதைய பேச்சாளராக இருப்பவர். இந்தச் சக்திகளே இப்படி ஒரு இடத்தை வந்தடைந்திருக்கின்றன என்றால் தற்போதைய அடக்கப்படும் தமிழ், முஸ்லிம், மலையக தேசங்கள் இது குறித்து எவ்வளவு விழிப்புடன் இருக்க, செயற்பட வேண்டியிருக்­கிறது என்பதை விளங்கிக் கொள்வோம்.

இன்றைய பேரினவாதம் பாசிச வடிவமெடுக்­கத் தொடங்கி விட்டது. கடந்த கால இனக்­கலவரங்கள், மற்றும் ஏனைய இன­ங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதற்கும் ஒரு ஒரு நிறுவ­னமயப்பட்ட அமைப்போ, சமூக கட்டமைப்போ, அதற்கான ஸ்தூலமான சித்தாந்தமோ இருந்தது கிடையாது. அவை சித­றுண்ட சித்தாந்தமாகவும், நிறுவனங்களாகவும், தனி நபர் வெறியாகவுமே இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைய பேரினவாதம் அப்படிப்­பட்டதல்ல. அதற்கு என்று இன்று சிங்கள வீர விதான எனும் ”அமைப்பு” வந்து விட்டது. சிதறியிருந்த சிங்கள பௌத்த சித்தாந்தம் ஒன்று மையப்படுத்தப்பட்டு அதற்கு கோட்பாட்டுருவம் கொடுக்கப்பட்டாகி விட்டது. அதற்குத் தெளிவான அரசியல் வடிமும் கூட இருக்கிறது. அது இனி எடுக்க வேண்டிய வடிவம்? இராணுவ வடிவம் தான் என்கிற நிலையை உணர்த்தி நிற்கிறது. சமீப காலமாக வீரவிதானவுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் இறக்கப்பட்டிருப்பதா­கவும், இது வரை 200 பேருக்கும் மேற்பட்ட இளைஞர்­களுக்கு முன்னாள் இராணுவத்தினரைக் கொண்டு பயிற்சி அளிக்கப்­பட்டிருப்பதாகவும் கூட அரசாங்க தரப்பைச் சேர்ந்தவர்களே கூறித் திரிகிறார்கள்.

இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்று கூறப்படும் அனகாரிக்க தர்மபால சிங்கள பௌத்தர்களல்­லாதவர்கள் மீது ஏற்படுத்திய (அவர் நடத்திய ”சிங்கள பௌத்­தயா” பத்திரிகை 1997இல் 100 வருட நிறைவைக் கொண்டாடி­யது) இனக்குரோதம் மற்றும் புனைவுகள், கற்பிதங்கள், ஐதீக­ங்கள் என்பவை பின்னர் வளர்க்கப்பட்ட சிங்கள பௌத்த தூய்மைவாதத்துக்கு பலம் சேர்த்தன. அதன் பின்னர் அரசியல் கட்சிகள் தொடக்கம், வெகுஜன இயக்கங்கள் வரை பல சிங்களத் தூய்மையைப் பாதுகாப்­ப­தற்கான இயக்கங்கள் தொடக்கப்­பட்டன.

70களின் பிற்பகுதி மற்றும் 80களின் முற்பகுதி தமிழ்த் தேசப் போராட்டம் முனைப்பு பெற்றதும், அது ஆயுதப் போராட்டத்­துக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலும் தென்னிலங்கையில் அரசியல் கட்சிகள் போட்டிக்கு பேரினவாதம் பேசத் தொடங்கின. பேரினவாதம் பேசாமல் அரசியலில் இருப்புக் கொள்ள முடியாத நிலை தோன்றியது. பேரினவாத­மயமாக்கல் என்பது மிகவும் நுணுக்கமாகவும், சாமர்த்தியமாகவும் வளர்ந்து வேறூன்றத் தொடங்கியது.

ஆரம்பத்தில் பாஷா பெரமுன, தேசப்பிரேமி பிக்கு பெர முன, தேசிய விடுதலை முன்னணி, போன்ற அமைப்புகள் அரசியலில் ஈடுபட்டன. அதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ”ஹெல உருமய” எனும் இனவாத அமைப்பு இயங்­கத் தொடங்கியது. களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்­பினர் திலக் கருணாரத்ன (1994இல் ஐ.தே.க.வில் இணைந்தார்) தலைமையிலான இந்த அணியில் தற்போதைய ஜனாதிபதி சந்திரிகாவின் சகோதரனும், முன்னாள் எதிர்க்கட்சித் தலை­வரும் இன்றைய ஐ.தே.க. பிரமுகருமான அனுர பண்டாரநா­யக்கவும் இருந்தார். 70களின் பிற்பகுதி மற்றும் 80களின் ஆரம்ப காலகட்டங்களில் ஐ.தே.க.வுக்குள் இருந்த முக்கிய அணி மாத்ரு பூமிய குழுவினர். இதனை நடத்தியவர் களனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், 1983 கலவரத்தில் முக்கிய பங்காற்றியவருமான சிறில் மெத்திவ். இவர் ”மாத்ரு பூமிய” எனும் இனவெறியைத் தூண்டும் பத்திரிகையை அன்று நடத்தி வந்தார். இது இரு வருடங்கள் வெளிவந்து நின்று போனாலும், பொய் புனைவுகளையும் பேரின­வாதத்தையும் பரப்பி அப்பத்திரிகை ஆற்றிய பாத்திரம் முக்கியமானது.

அதன் பின்னர் கூட நூற்றுக்கணக்கான இனவாத அமைப்­புகள் தோன்றின. ஆனால் அவற்றில் எதுவும் தொடர்ச்சியாக நிலைபெற­வில்லை. ஆனாலும் 80களில், 90களில் பேரின­வாத கட்சிகளாகவே பகிரங்கமாக அடையாளம் காணப்பட்ட கட்சிகள் மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் ”சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷய” (சிங்கள மண்ணின் மைந்தர்கள் கட்சி) 1989 தேர்தலில் பராளுமன்றத்துக்கு 2 உறுப்பினர்கள் தெரிவான ம.ஐ.மு. 1994இல் படு­தோல்வி அடைந்தது. இதற்கு­ரிய காரணமாக தென்னிலங்கை புத்திஜீவிகள் மத்தியில் ”இனவாதத்துக்கு சிங்கள மக்கள் கொடுத்த சாட்டை அடி” என்ற போதும் அது அல்ல ஐ.தே.க. மீது தென்னிலங்கை சிங்கள மக்கள் கொண்டிருந்த வெறுப்பும் அந்த எதிரிக்கு எதிரான சக்தியை (பொ.ஐ.மு.­வை) பலப்படுத்த வேண்டும் என்கிற அவாவும் தான் காரண­மாகின. மண்ணின் மைந்தர் கட்சியைப் பொறுத்த­வரை அது அவ்வளவு செல்வாக­்கைப் பெறவில்லை. அதற்கான காரணம் அது பாராளு­மன்ற அரசியலை இலக்காக மட்டுமே கொண்டு இனவாதம் பேசத்­தொடங்­கியமை தான். இந்த இடத்தில் தான் சிங்கள வீரவிதானவோடு தொடர்புறுத்தி பார்க்க வேண்டும். வீரவிதான இன்று வரை பாராளுமன்ற அர­சியலில் அக்கறை காட்டவில்லை. அரசியல்வாதிகளை கடு­மை­யாக எதிர்க்கிறார்கள், தேர்தற் காலங்களில் அவர்களும் சமாந்தரமாக இயங்கு­கிறார்கள். ”சிங்கள பௌத்தர்களின் துரோகிகள்” என்று ஏனைய கட்சிகளை அம்பலப்படுத்த அந்தக் காலங்களை நன்றாக பயன்படுத்திக்­கொள்கிறார்கள். அவர்க­ளின் மூலோபாயம் சிங்கள பௌத்த அரசை கட்டியெழுப்புவ­தற்காக அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக இருந்தாலும் அவர்களின் தந்திரோபாயத்தின்படி அவர்கள் தற்போதைக்கு தாங்கள் இந்த பாராளுமன்ற அரசியலில் இல்லை என்பதை தமது நடவடிக்கைகளின் மூலம் வெளிக்காட்டி வருகின்றனர்.

வீரவிதான இயக்கம் 1995 யூலை 7ஆம் திகதி ஆரம்பிக்­கப்பட்டது. அதனை ஒரு இரகசிய இயக்கமாகவே ஆரம்பித்­தனர் என்ற போதும் இதனை சமூக சேவைகள் திணைக்களத்தில் ”ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகவே” பதிவு செய்தி­ருந்தார்கள். பதிவு செய்வதற்காக அவர்களின் கொள்கை, செயல்திட்டம், யாப்பு, என்பவை கொடுக்கப்பட வேண்டும். அதனைக் கொடு­த்­­தார்கள். ஆனால் அதில் உள்ளவை அல்ல பின் வந்த நாட்களில் அவர்கள் முன்வைத்த செயற்திட்டங்களும், கொள்கைகளும். இதன் ஆரம்பகர்த்தாவான சம்பிக்க ரணவக்க முன்னர் ஜே.வி.பி.யின் ஆரவாளராக இயங்கிவந்தவர். அதன்பின் ”ஜனத்தா மித்துரோ” (மக்கள் தோழர்) எனும் அமைப்பை நிறுவி இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு பற்றிய பல கருத்தாக்கங்களைப் பற்றி ஆராய்ந்தனர். ஏகாதிபத்திய எதிர்ப்பின் அவசியம் பற்றி அதிகம் இவ்வமைப்பால் பேசப்­பட்டது. 90களின் ஆரம்ப அரை தசாப்தகாலமாக இயங்கிய பல்வேறு இனவாத அமைப்புகள் உதிரி உதிரியாக பல்வேறு செயற்பாடுகளை செய்தனர். நளின் டி சில்வா, குணதாச அமசேகர, மாதுலுவாவே சோபித்த ஹிமி, எஸ்.எல்.குணசேகர, பெங்கமுவே நாலக்க ஹிமி, மடிகே பஞ்ஞானசீல தேரோ போன்றோர் இதனை வழிநடத்தியவர்களில் முக்கியமான­வர்கள்.

ஆனால் சம்பிக்கவின் சளைக்காத செயற்திறன், வேகம் என்பவற்றுக்கு முன்னால் அவர்களால் நின்று பிடிக்க முடியவில்லை. சம்பிக்க மெதுமெதுவாக இவ்வமைப்புகளில் தனது சகாக்களை ஊடுருவ வைத்தும் நேரடியாக அனைவ­ரையும் ”சேர்த்து சிங்கள ஆணைக்­குழு”வை ஏற்படுத்தியும் செயற்பட்டதுடன், சகல அமைப்புகளிலும் இருந்தவர்களில் பெரும்பாலா­னவர்களை தனது பக்கம் சேர்த்துக் கொள்ள முடிந்தது. அவர்களில் பெரும்பாலானோரை இன்று வீரவிதா­னவோடு இணைத்து அவர்களின் முன்னைய அமைப்புகளை அப்படியே தனது கட்டுப்பாட்டுக்குள்- ஒரே குடையின் கீழ்- கொண்டுவர சம்பிக்கவால் முடிந்தது.

சிங்கள வீரவிதானவின் கீழ் பல்வேறு நிறுவனங்­களை பினாமி பெயர்களில் தொடக்கி­னார்கள். ”ஸ்ரீ லங்கா ஐக்கிய வர்த்தகர் சங்கம்” இதில் முக்கியமானது. (ஆரம்பத்தில் சிங்கள வர்த்தகத்தின் வளர்ச்சிக்காகவே இது தோற்று­விக்கப்பட்டதாக அதன் தேசியக் கமிட்டி உறுப்பினர் குலதுங்க ராஜபக்ஷ குறிப்பிடுகிறார் -”ஹெலருவன” செப் 99) இதன் நூற்றுக்­கணக்கான கிளைகள் இன்று நாடளாவிய ரிதியில் ஆரம்பிக்­கப்பட்டிருக்கிறது. சிங்களவர் மட்டும் உற்பத்தியில் ஈடுபட­ வேண்டும், ஏனைய இனத்தவரிடமிருந்து விவசாய மற்றும் தொழிற்துறையை படிப்படியாக கைப்பற்றுவது என்பவை தான் வழிமுறை. கிரிபத்கொடவில் கடந்த வருடம் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான ”கிறிஸ்தம்பு பார்ம்” கடையை கைவிடச் சொன்னதும், கேட்காத நிலையில் அதனை குண்டு வீசி தகர்த்ததும், இந்த அடிப்படைகளில் தான். அது போல நுவரெலியா, கண்டி, பொரல்லை போன்ற இடங்களில் தமிழர்களின் கடைகளில் ஒன்றும் வாங்க வேண்டாம் என்று துண்டுப்பிரசுரம் விநியோகித்த­தும், சிங்களவர்கள் என்னென்ன பொருட்களை நுகரலாம் எவற்­றை­யெல்லாம் வாங்கக்கூடாது என்ற பட்டியலைத் தயாரித்து துண்டுப்பிரசுரமாக வெளியிட­்டதும், (இந்தப் பிரசுரமும் பட்டியலும் ”சித்திஜய” எனும் சஞ்சிகையின் ஓகஸ்ட் இதழில் வெளியாகி­யுள்ளது) சகல வங்கிகளிலும் தமிழர்களின் கணக்­குகளைப் பற்றிய தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கி­றார்கள். இந்த வர்த்தகர் சங்கத்தால் சிங்கள மாணவர்க­ளுக்கென புலமைப்பரிசில் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களை செய்து வருவதுடன், வர்த்தகர்கள் பலரை உலக நாடுகள் பல­வற்றுக்கு அவரவர் சார்ந்த துறை பற்றி அறிய­வும் பயிற்சி பெற­வும் உறுப்பினர்களை அனுப்பு­தல். எவரெவர் இப்படி போய் வந்திருக்கி­றார்கள் என்பதை வீரவி­தானவின் உத்தியோகபூர்வ பத்திரிகையில் படங்களுடன் பிரசுரிக்கிறார்கள்.

இதனை விட ”வீர­விதான பெண்கள் இயக்­கம்” எனும் இயக்கம் பெண்கள் மத்தியில் இய­ங்கி வருகிறது. பெண்­களை இலக்காகக் கொண்ட அணி­திரட்­ட­லுக்கும் வீரவி­தானவின் நிகழ்ச்சிகள், கூட்டங்கள், ஆர்ப்பாட்­டங்கள், ஊர்வலங்கள் என்பவற்றின் போது பெண்­களைக் கொண்டு செய்விக்கின்ற ”பணி­விடை­களை” செய்விக்கின்­றார்கள். செப்டம்பர் 17ஆம் திகதி அனகாரிக்க தர்மபாலவின் 135வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு படையினருக்கு ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி­யொன்றை அவிஸ்ஸாவெல்ல ஸ்ரீ சுதர்மராம பிரிவேனா விகாரையில் ஒழுங்கு செய்திருந்தது பெண்கள் இயக்கமே என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது முக்கியமான ஒன்று பயங்கரவாத ஒழிப்பு தேசிய இயக்கம் (NMAT) இது கடந்த 1998 மார்ச் 5ஆம் திகதி மருதானை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து உருவாக்கப்பட்­டதாக அது அறிவிக்­கிறது. இவ்வருடம் ஜனவரி 14ஆம் திகதி இவ்வமைப்பின் வேலைத்திட்டம் முன்வைக்கப்­பட்டது. பெரும் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து முன்வைக்கப்பட்ட இக்கூட்டத்தில் உரையாற்றிய சம்பிக்க ரணவக்க ”இந்த வேலைத்திட்டத்தை அரசு ஏற்றுக் கொண்டால் படைக்கு ஒரு லட்சம் இளைஞர்களை நாம் தருவோம்” என்றார். (இந்த அறிக்கை பற்றிய முழு விபரமும் பெப்ரவரி சரிநிகரில் வெளி­வந்தது.) தமிழ் மக்களை எப்படி நிரந்தர கண்காணிப்புக்குள் வைத்திருப்பது, ”பயங்கரவாதிகளை” எப்படி ஒழிப்பது என்பதற்கான அவர்களின் திட்டம் அதில் தெளிவாக இருந்தது. இவ்வமைப்பை சிங்கள வீரவி­தானவின் கீழ் இயங்குகின்ற அமைப்பாக அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் வீர­விதானவின் தலைவர்களில் பெருமளவானோர் (சம்பிக்க உட்பட) இதில் உள்ளனர். வீர­விதானவின் வெப் தளத்தில் NMATயின் கொள்கை, வேலைத்­திட்டம் என்பவற்றையும் உள்ளடக்கியிருக்கிறார்கள்.

பாசிசத்தின் முக்கிய தந்திரோ­பாயங்களில் ஒன்று அது முக்கிய சகல தளங்களிலும் ஊடுருவி தன்னை நிலைநிறுத்தி, காலப்போக்கில் கைப்பற்றி, கட்டுபடுத்தும். இன்று வீரவிதான ஊடுருவாத தளங்கள் இல்லையெனலாம். பிரதான அரசியற் கட்சிகளை எடுத்துக்­கொண்டால் ஐ.தே.க.வின் முன்னாள் மேல்மாகாண முதலமைச்சர் சுசில் முனசிங்க இதில் ஒரு அங்கத்தவர், அது தவிர ஐ.தே.க.வின் தற்போதைய தலைமை மட்டத்தில் உள்ள பிரபல நடிகர் ரவீந்திர ரந்தெனிய வீரவிதான கூட்டங்களில் முக்கிய பேச்சாளராகக் கலந்து கொண்டு வருகிறார். (பார்க்க ஹெலருவன-ஜனவரி 99) அம்பாறை­யிலுள்ள பிரேதச சபைத் தலைவர் தயா கொப்ரல் (ஐ.தே.க.) என்பவர் இதன் அமைப்பாளராக உள்ளார். இவரது காரில் வீரவிதானவின் கொடியை மாட்டிக்கொண்டு தான் செல்கிறார். ஆனால் பலாங்கொடயில் ஒக்டோபரில் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் காமினி அத்துகோரல ”..வீரவிதான இயக்கத்துடன் ஐ.தே.க. தொடர்பு வைத்திருந்தால் தகவல் தாருங்கள்” எனப் பேசியிருக்கி­றார். உண்மைதான் தலைமை முழுவதும் வீரவிதானவிடம் இதுவரை சரணடையவில்லை. ஆனால் இன்றைய நிலை­மையில் அதற்­கான காலமும் வெகுதூ­ரத்தில் இல்லை.

பொ.ஐ.மு.வைப் பொறுத்த­வரை ஏற்கெனவே ஸ்ரீ.ல.சு.க. என்பது சிங்களப் பேரினவாதத்தின் மீது தான் அது அரசியல் நடத்தி வந்துள்ளது. சிங்கள பௌத்தத்தை நிறுவனமயப்­படுத்துவதில் அதற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. கள்ளத்­தோணிகள் என்று இந்தியா வம்சாவழியினரை நாடு­கடத்தி­யது, பௌத்த மதத்தை அரச மதமாக்கியது, சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டு வந்தது போன்ற பலவற்றை அடுக்கிக்­கொண்டு போகலாம். இன்று அது ”செத்துப்போன” பாரம்பாpய இடதுசாரி கட்சிகளை வைத்துக்­கொண்டு முற்போக்கு முகமூடி போட்டுக்­கொண்­டிருந்தாலும் அதிலுள்ள பலர் வீரவிதான­வுடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றார்கள். ”சிங்கள ஆணைக்குழு” விசாரணை நடத்திய­போது அதில் சிங்கள மக்கள் தமிழ், முஸ்­லிம்களால் அழிக்­கப்பட்டு வருவதாக சாட்சியம் கூறி­யவர் பொ.ஐ.மு.­வின் குரு­நாகல் மாவட்ட பாராளு­மன்ற உறுப்பினர் ஜயசேன ராஜகருணா. 1998 மே 26ஆம் திகதி இவர் அந்த சாட்சி­யத்தை அளித்திருந்­தார். இன்று தீர்வுப்பொதி தொட­ங்கி, சமவாய்பபுச் சட்டம் வரை பாசிசத்துக்கு விட்டுக்­கொடுத்­தமை வெறும் அதன் சரணடை­வையோ, இயலா­மையையோ மட்டும் காட்ட­வில்லை. பொ.ஐ.­மு.வுக்குள்­ளேயே எத்தனை எதிர்ப்புகள் இருந்தன என்பதை­யும் சேர்த்து அம்பலப்படுத்தின. அச்சக்திகள் யார்?

படையிலிருந்து ஓய்வு­பெற்றவர்கள், மற்றும் இன்றும் களத்தில் இருக்கும் படைத்தலைவர்களும் வீரவிதானவின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள். உதாரணத்திற்கு மேஜர் ஜெனரல் லக்கி அல்கம இதன் அமைப்­பாளர்களில் ஒருவர், அதுபோல மேஜர் ஜெனரல் ஆனந்த வீரசேகர வீரவிதானவின் நிறைவேற்றுச் செயலாளராக இருக்கிறார். பிரேமதாச காலத்தில் ஜே.வி.பி. இளைஞர்களை புனருத்தாபனம் செய்யும் பொறுப்பில் இவர் இருந்தார். (அந்த முகாம்களில் தான் பெரும் சித்திரவதைகள், கொலைகள் நடந்தன என்பது தொpந்ததே.) ”ஹெலருவன” செப்டம்பர் இதழில் தீர்வுப்பொதிக்கு எதிரான இவரது கட்டுரையொன்றும் பிரசுரமாகியிருக்கிறது. இவர் கடந்த 17 ஒக்டோபர் லங்காதீப பத்திரிகைக்கு வீரவிதானவின் சார்பாக அளித்துள்ள பேட்டியின் போது அரசியலில் ஈடுபடுமா வீரவிதான என்று கேட்ட கேள்விக்கு

”எங்களின் நோக்கம் சிங்கள இனத்தை அணிதிரட்டி இடிந்துபோன சிங்கள பொருளதாரத்தை தூக்கி நிலை­நிறுத்துவதே. சகல பேதங்களையும் கடந்து சிங்களவர்களை அணி­திரட்டுவதே.

அப்படியென்றால் அமுக்கக்­குழுவா?

அமுக்கக் குழுவென்பது வெறும் கிளர்ச்சிகர வடிவமல்லவா? அரச யந்திரத்தில் துருப்பிடித்த பக்கங்களை சுத்தப்படுத்துவதே எமது வழிமுறை.” எனப் பதிலளித்துள்ளார்.

சில மாவட்டங்களில் பொலிஸ் அதிகாரிகள் இதன் அமைப்பாளர்­களாக இருப்பது வீரவிதானவின் பத்திhpகைகளிலும் வெளியாகி­யிருந்தது.

இன்றைய தொடர்புசாதன உலகில் பெரும்போக்கு எதுவோ அதனை பின்தொடர்ந்து செல்பவர்­கள் தான் முதலாளித்துவ சந்தையில் நிலைக்க முடிகிறது. அந்த வகையில் இன்று சிங்களப் போpனவாதத்தை உயர்த்திப் பிடிப்பதில் சிங்கள தொடர்பு சாதனங்களுக்கிடையில் போட்டா போட்டி நிலவுகிறது. அச்சு ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட இலத்திரனியல் ஊடகங்கள் சகலதற்கும் இது பொருந்தும். திவய்ன (அதன் சகோதரப் பத்திரிகை வுhந ஐளடயனெ) இலங்கையில் அதி கூடிய விற்பனை உள்ள பத்திரிகையாக இருப்பது இதனால் தான். தொலைக்காட்சி சேவைகளிலேயே டீ.என்.எல். அதிக இனவாதம் கக்கும் ஒன்றாகும். அதுபோல ”சிரச”, ”சவன” இரண்டும் இந்த வகையறாக்களைச் சேரும். வீரவிதான­­வின் செய்திகளுக்கு இவை அதிக முக்கி­யத்துவம் வழங்கி வருகின்றன.

கடந்த சில மாத­ங்­­களுக்கு முன்­னர் லங்காதீப பத்திரிகைக்குச் சென்ற சம்பிக்க ரணவக்க அது சிங்களவர்களுக்கு எதிரான பத்திரிகையென்றும் சிங்கள இனத்தவருக்கு எதிரான இதனை மக்கள் தகர்ப்பார்களென்றும் மிரட்டியிருக்கிறார். பின்னர் அவரை ”விஜய” வெளியீடு நிறுவனத்தின் நிர்வாகம் அழைத்து இருத்தி அவரையே இனி எழுதும்படி கேட்டுக் கொண்டதன் பின்னர். ஞாயிறு Sunday Times இல் எழுத வைத்தி­ருக்கிறது. ”கும்பகர்ண” எனும் பேரில் எழுதப்படும் இந்த வாரா­ந்த பத்தி உடனடியாக சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு லங்காதீபவிலும் வெளியாகி வருகிறது. வீரவிதானவுக்கு இவ்வருடத்திலிருந்து வெப் தளத்தையும் நிறுவியுள்ளது. http//www.svv.org எனும் இத்தளத்தில் பெருமளவு கட்டுரைகள், கொள்கை விளக்கங்கள், வேலைத்திட்டம், அறிக்கைகள் எல்லாம் உள்ளடக்கப்­பட்டுள்ளன. 'கும்பகர்ண'வின் கட்டு­ரைகளும் இதில் அடக்கப்­பட்டுள்ளன. ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க., ஜே.வி.பி.க்கு கூட வெப் தளங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கையில் எந்த அரசியற் கட்சிக்கோ அல்லது எந்த சமூக இயக்கங்களுக்கோ இப்படிப்பட்ட ஒரு பெரிய வெப்தளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீரவிதானவின் ”தேசியக்கொள்கை வெளியீடு” யூலை 12 அன்று காலை ”சுபநேரத்தில்” மல்வத்த அஸ்கிரி மகாநாயக்கர், கண்டி தலாதா மாளிகை நிலமே நிரஞ்சன் விஜேரத்ன ஆகியோர் முன்னி­லையில் வெளியிடப்­பட்டிருந்தது. இதுவும் இந்த வெப்தளத்தில் கிடைக்கிறது. மாதாந்தம் வெளிவரும் வீரவிதானவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ”ஹெலருவன” வீரவிதா­ன­வின் விரிந்து பரந்த செயற்­பாடுகளை தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன. செப்டம்பர் இதழில் வீரவிதானவின் தேசியக் கமிட்டி உறுப்பினர் பீ.ஏ.மகிபால ”ஊருக்கு 15 பேர் எங்களுடன் இணைந்­தால் எமது இலக்கை சுலபமாக எட்டி விடலாம்” என்கிறார். கங்கொடவில சோம ஹிமியை வீரவிதான வளைத்துப்போட்டுக் கொண்டு விட்டது. ஆரம்பத்தில் வீரவிதானவை திட்டிக் கொண்டிருந்த சோமஹிமி இப்பத்­திரிகைக்கு அளித்தி­ருக்கிற பேட்டியில் ”சிங்கள இனம் மலட்டுத்தனத்துக்கு உள்ளாகி அருகி வருகிறது. சிங்களவர் 2-3 பிள்ளைகள் பெறுகின்ற போது தமிழ் முஸ்லிம்கள் 7-8 பிள்ளைகளைப் பெற்று பெருகி வருகிறார்கள்” என்றெல்லாம் அதில் பேட்டியளித்துள்ளார். அதே பத்திரிகையில் ”203 பாடசாலைகள் மேல்மாகணத்தில் மூடப்பட இருக்கிறது. சிங்கள இனத்தவர் குறைந்து மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளதா­லுமே இந்நிலைமை...” என ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. (பக்கம் 16)

பல்கலைக்கழகங்கள், பாடசாலை என்பனவற்றில் ஏலவே ஊடுருவி கைப்பற்றத் தொடங்கி விட்டனர். பெருமளவான பல்கலைக்கழகங்களில் ஜே.வி.பி.யின் மாணவர் அமைப்பு தான் பலமானதாக இருந்து வரும் நிலையில் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தேர்தல்களில் வீரவிதானவுக்கு பெருத்த தலைவலியாக இருப்பது ஜே.வி.பி. அடிக்கடி இவை இரண்டும் மோதிக்­கொள்கின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பெரும் சண்டை இவ்விரு தரப்பினருக்கிடை­யிலேயே இடம்பெற்றிருந்தது குறிப்­பிடத்தக்கது. இன்று தமிழ் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் பல்கலைக் கழகங்களில் அம்மாணவர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதும், அவர்களை புலிகள் என்றும் அவர்களை பல்கலைகழக விடுதிகளிலில் இருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் எத்தனித்து வருகின்றனர். இந்தப் போக்கின் அபாயம் குறித்து சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருவதைக் காணமுடிகிறது.

மேலும் முக்கியமாக பௌத்த உயர் பீடங்களுக்குள் ஊடுருவி அதனைக் கட்டுப்படுத்தி வருகிறது என்றால் அது மிகையில்லை. இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் எல்லோரையும் விகாரை­களுக்கூடாக வலைப்பின்னலாக மையப்­படுத்தி­யிருப்பது இந்த பௌத்த மகா சங்கம். என்பது கவனிக்கத்தக்கது.
வீரவிதான கிராமிய மக்களையும் நகர்ப்புற வர்த்தகர்க­ளையும் இலக்கு வைத்து தான் இயங்குகிறது. அதனால் தான் கிராமப்புற இளைஞர்களில் செல்வாக்கு செலுத்தி வரும் ஜே.வி.பி.­யுடன் அது கடுமையாக மோதி வருகிறது. அதுபோல வீரவிதானவின் சாதியப் பின்னணியைப் பொறுத்தவரை அதன் தலைமையில் இருப்பவர்களில் பெருமள­வில் சலாகம சாதியினராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிங்கள வீரவிதானவின் அமைப்பு வடிவமும், அதன் செயல்வேகத்துக்கும் முன்னால் தென்னிலங்கையில் எந்த அமைப்பும் கிடையாது. ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்து கொண்டி­ருக்­கிறார்கள். போஸ்டர்களை அடிப்பது, கூட்டம் கூடுவது, நூல் வெளியிடுவது, அறிக்கை வெளியிடுவது, என்பன­வற்றோடு ஒவ்வொரு நாளைய முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கும் உடனடியாக தங்களின் நிலைப்­பாட்டை வைத்து விடுகிறார்கள். (வீரவிதானவின் நான்காவது ஆண்டு நிறைவை கண்டியில் யூலை 11 அன்று நடத்திய போது பேசிய சம்பிக்க ரணவக்க ”அதன் நான்கு வருட சாதனைகளில் ஒன்றாக தீர்வுப் பொதியை கைவிடச்­செய்தமை”யை­யும் குறிப்பிடுகிறார்.) அரச கட்டமைப்பு அதற்கு சாதகமாக இருக்கிறது.

அண்மையில் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த மனித உரிமையாளர் ஒருவர் இப்படிக் கூறினார். ”...நாங்கள் தமிழ் மக்களின் உரிமை, போரெதிர்ப்பு, சமாதானம், அரசியல் தீர்வு, என்று ஒரு புறம் கொண்டு சென்ற கருத்தாடலை திசைதிருப்பி சிங்கள பௌத்த மீட்பு, போரே வழி, என்று அதற்கான கருத்தாக்கங்களை நிறுவிவிட்டுள்ளனர் வீரவிதானவினர். இப்போது எங்களைப் போன்ற சமாதானவாதிகளுக்கும் என்ன நேர்ந்திருக்கிறது என்றால் முன்னைய அந்த தமிழ் மக்கள் உhpமை என்பதெல்லாம் பேசவிடாமல் செய்யப்பட்டு, வீரவிதான­வுக்கு பதிலளிப்பதில் எமது கவனம் முழுக்க குவிந்து விட்டுள்ளது. இது ஆபத்தான போக்கு என்பதை இப்போது தான் உணர்கிறோம். வீரவிதான இந்த இடத்தில் தான் வெற்றியீட்டியுள்ளது...”

பாசிசமயமாக்கல் மிக வேகமாக நடந்து வரும் நிலையில், இன்றைய பாராளு­மன்ற அரசியல் கட்டமைப்பில் இயங்கி வரும் பிரதான கட்சிகள் ஒன்றில் தாங்கள் பாசிசத்தை கைப்­பற்ற வேண்டும் அல்லது பாசிச சக்திகள் அக்கட்சிகளை கைப்பற்றிவிடும் நிலை தோன்றி வருகிறது. இடதுசாரி சக்திகள் இதனைக் கிஞ்சித்தும் அடையாளம் காணாமல் வெற்று வர்க்க சூத்திரத்தோடு தங்கள் அரசியலைக் குறுக்கிக் கொண்டுள்ளது தான் பெரும் துயரம்.

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all