Friday, January 30, 2009

நோர்வே "நோ வே" (No Way)

என்.சரவணன்
நோர்வேயை விட்டால் ”நோ வே” (No Way) என்ற தலைப்பில் கடந்த 19ஆம் திகதி லங்காதீப பத்திரிகையில் உபுல் ஜோசப் பெர்ணாண்டோவின் பத்திக் கட்டுரை வெளியாகியிருந்தது. கடந்த 19 ஞாயிறு சிங்களப் பத்திரிகைகளில் ”10ஆம் திகதி ராஜகிரியவில் நடந்த சம்பவம் புலிகள் யாரென்பதை தெளிவுபடுத்திவிட்டது. பேச்சுவார்த்தைக்கான ஆரம்பங்கள் நடந்துகொண்டிருக்கும் போதே இத்தகைய கொடுர சம்பவங்களில் புலிகள் ஈடுபடுகிறார்கள். இதற்கு மேலும் பேச்சுவார்த்தை அவசியமா?” என்கிற கருத்துபட சில கட்டுரைகள் வெளிவந்திருக்கிறன. லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் சில பத்திக் கட்டுரைகள் என்பன பேச்சுவார்த்தையைத் தவிர வேறு வழியில்லையென்றும் இனி தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் போரை மேலும் பரவலாக்குவதையே செய்யும் என்றும் போதும் இந்த அவலம் என்றும் தெரிவிக்கின்றன. பயங்கரவாத தாக்குதல் நடக்கின்ற போது சமாதானப் பேச்சு தேவைதான என்கிற அந்த ஆசிரியர் தலையங்கத்தின் இறுதியில் ”..சமாதானம் வந்தால் தோல்வி பிரபாகரனுடையது. சமாதானத்தை தோற்றுவிக்க முடியாது போனால் அது பிரபாகரனின் வெற்றி. பிரபாகரனை தோற்கடிப்பதே பெரும்பான்மை மக்களின் விருப்பம். அப்படியாயின் சமாதானத்தை ஏற்படுத்தியாகவேண்டும்...”

ஆனால் இதே லங்காதீபவில் தான் ”கும்பகர்ண” எனும் பெயரில் பத்தியொன்றை (இது லங்காதீபவின் சகோதரப் பத்திரிகையான சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளிவரும் ஆங்கிலக்கட்டுரையின் சிங்கள வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.) எழுதி வரும் சிங்கள வீரவிதானவின் தலைவர் சம்பிக்க ரணவக்க மற்றும் விசமத்தனமான பேரினவாதத்தைக் கக்கி வரும் உபுல் ஜோசப் பெர்ணாண்டோ போன்றோரின் கட்டுரைகளும் வெளிவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. லங்காதீபவை திவய்ன பத்திரிகையுடன் ஒப்பிட்டு அது நடுநிலையான பத்திரிகை என பேசும் பலர் எம்மத்தியில் பலர் உளர். சந்தையில் அதன் விற்பனையும், அதன் உரிமையாளர்களின் அரசியல் நலன்களைப் பற்றியும் சரிநிகரில் தனியான கட்டுரை ஏற்கெனவே வெளிவந்துள்ளன.

பேரினவாதமயப்பட்ட சிங்களச் சூழலில் எந்த தொடர்பூடககங்கள் கூட விதிவிலக்கில்லை என்பது தொடர்ச்சியாக எமக்கு உறுதிசெய்யப்பட்டு வந்திருக்கின்றன. இவை சமூகத்தில் ஆற்றும் பாத்திரம் மிகவும் காத்திரமானவை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்று அனைத்து பேரினவாத இயக்கங்களையும் ஒன்றுதிரட்டி ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை அமைத்து தீவிரமாகவும் பகிரங்க மற்றும் தலைமறைவு வேலைமுறையை கொண்டுள்ளதுமான சிங்கள விரவிதான அமைப்பு இந்த தொடர்பூடகங்களை கைப்பற்றித் தான் தமது பாசிச பிரச்சாரங்களை பரப்பி வருகின்றன. அவை மெதுமெதுவாக இந்த தொடர்பூடகங்களுக்குள் ஊடுறுவி மிகக் கவனமாக தமது காரியத்தை திறம்பட முடித்துவிடுகின்றன. சிங்கள வீரவிதானவின் அணியில் தன்னை துண்டித்துக்கொண்டவரும் அதற்கு முன்னர் சிங்கள பேரினவாதத்துக்கு தலைமை தாங்கிச் சென்றவரும் ஜாதிக்க சிந்தனய மற்றும் சிந்தன பர்ஷதய போன்ற இயக்கத்தின் இயக்கத்தின் தலைவரும், காலய எனும் பேரினவாத இணையத்தளத்தை நடத்தி வருபவருமான நளின் டி சில்வாவின் எழுத்துக்கள் சமீப காலமாக பேச்சுவார்த்தை விடயம் குறித்து கழுதி வரும் கட்டுரைகள் உலகளவில் நோக்கப்படுகின்ற கட்டுரைகளாக இருக்கின்றன. நோர்வே தலையீடு சம்பந்தமாக அவர் தி ஐலண்ட் பத்திரிகைக்கு எழுதிய சமீபத்திய கட்டுரைகளுக்கு இணையத்தளங்கள் பலவற்றில் இணைப்பு (டink) கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணிகளுடன் தான் தற்போதைய பேச்சுவார்த்தையை எதிர்த்து கிளம்பியுள்ள எதிர்ப்புகளை பார்க்க வேண்டியுள்ளது. ஒரு புறத்தில், இத்தனை ஆண்டுகளாக பேச்சுவார்த்தை, உடன்படிக்கை என தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்த தமிழ் மக்களின் நிலையில் இருந்து தற்போதைய முயற்சியின் நம்பகத்தன்மை குறித்து தமிழ் மக்கள் எச்சரிக்கைகளுடன் கூடிய சந்தேகங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, மறுபுறத்தில் இம்முயற்சி குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களும், பிரச்சாரங்களும், எதிர்ப்புகளும் இதற்கு நேரெதிராக உள்ளன. தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பவையாக அவை அமைகின்றன. சிங்கள வீரவிதான அமைப்பும், அதன் முன்னணியான பயங்கரவாத எதிர்ப்பு தேசிய முன்னணியும் ஏனைய பேரினவாத அமைப்புகளை திரட்டிக்கொண்டு நாட்டில் பல பாகங்களிலும் நடத்தி வரும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் நோர்வே தூதரகத்திற்கு முன் இரு தடவைகள் நடத்தி முடித்திருக்கிற ஆர்ப்பாட்டங்கள் என்பன எல்லாம் உணர்த்தி நிற்பவை என்னவெனில் சிங்கள பாசிச சக்திகளிடமிருந்து தப்பி இந்த முயற்சிகளை அரசாங்கமொன்று செய்வதாயின் முதலில் அத தனது பேரினவாத சித்தாந்தங்களிலிருந்து முறித்துக் கொண்டதாகவும், அந்த பேரினவாத தற்கொலையின் அடியாக இருந்துகொண்டு பேரினவாத சக்திகளுக்கு (கடந்த காலங்களைப் போல) கட்டுப்படாததாகவும் இருப்பது முன்நிபந்தனையாகிறது. ஆனால் இந்த அரசாங்கம் இதுவரை அதனை உறுதி செய்யவில்லை. தனது அரசாங்கத்தின் தப்பிப்பிழைப்புக்காக ஏகாதிபத்தியம், பேரினவாதம், உள்ளூர் முதலாளிகள் என பலவற்றிலும் தங்கியிருந்து கொண்டு இந்த முயற்சியை செய்து வருகிறது. அரசு நேர்மையாகவும் இந்த சக்திகளுக்கு கட்டுப்படாமலும் துணிவாக இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாயின் முதலில் அரசாங்கதின் தீர்வுப் பொதியில் நம்பகமான மாற்றம் இருந்திருக்க வேண்டும். ஆனால் 1995 ஓகஸ்டில் வெளியிட்ட தீர்வுப் பொதி பேரினவாத நிர்ப்பந்தங்கள் காரணமாக வெட்டிக்கொத்தி இறுதியாக தீர்வுக்கு கிஞ்சித்தும் உதவாத ”பொதி”யை இன்றும் முன் வைத்து வருகிறது.

நோர்வே தொலைகாட்சியில் சகல சனல்களிலும் போகின்ற முக்கிய செய்திகளை விரும்பிய நேரத்தில் வசனங்களாகப் பார்க்கலாம். நோர்வேயின் தலையீட்டை சிங்களப் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பதாக இங்கு தொலைக்காட்சியில் அவ்வாறு காண்பிக்கப்பட்ட செய்தியை பார்த்த சில நோர்வேஜியர்கள் ”அரசாங்கம் கட்டுப்பட்டிருக்கிற இந்த பௌத்த சக்திகள் எதிர்க்கும் நிலையில் இது சாத்தியமா?” என்கின்றனர்.

நோர்வேயின் பாராளுமன்றத்தில் விவாதமொன்றின் இறுதியில் வாக்கெடுப்புத் தோல்வியினால் கடந்த வாரம் அரசாங்கம் பதவி கவிழ்ந்ததது. இலங்கையின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த வொல்லேபேக் காட்டிய ஆர்வத்தை தற்போது புதிதாக பதவியிலமர்ந்துள்ள தொழிற்கட்சி அரசாங்கத்தைச் சேர்ந்த வெளிநாட்டு அமைச்சர் தோர்ஜோர்ன் ஜக்லான்ட் (இவர் இதற்கு முன்னர் 1996 ஒக்டோபரிலிருந்து 1997 ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் பிரதமராக இருந்தவர். தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய அந்தஸ்துள்ளவர்) அவ்வளவு அக்கறைகொண்டவர் அல்ல எனும் கருத்து சிலரிடம் நிலவுகிறது. தற்போது பதவியிலள்ள அரசாங்கமும் இரண்டு ஆண்களுக்குப் பின் நடக்கப்போகும் தேர்தல் வரையாவது தாக்குபிடிக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. தற்போதைய அரசாங்கமும் பாராளுமன்றத்தில் பலமுள்ள கட்சியில்லை. ஓரிரு பெரும்பான்மைப் பலத்திலேயே உள்ளது. அதே வேளை இலங்கை விவகாரத்தில் நோர்வே நிச்சயம் விட்ட இடத்திலிருந்து தொடரும் என்றாலும் அக்கறையுடன் கவனமாக செய்யக்கூடிய நபராக ஜக்லான்ட் இருப்பாரா என்கிற சந்தேகமும் நிலவுகிறது. கடந்த மாதம் நோர்வே வந்திருந்த வெளிநாட்டு அமைச்சர் வொல்லேபேக் ஜனாதிபதி சந்திரிகாவோடு உரையாடும் போது அன்டன் பாலசிங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிற சிறுநீரக சத்திரசிகிச்சையை நோர்வேயில் செய்ய அவரை அழைத்துச்செல்வதில் ஆட்சேபம் இல்லையே என கேட்டதற்கு சந்திரிகாவும் அது தனக்கு பிரச்சினையில்லை என்றார். அதன் பின்னர் அன்டன் பாலசிங்கம் நோர்வே வந்து இரகசியமாக திரும்பியிருந்தார்.

தற்போதைய பேச்சுவார்த்தையை எதிர்த்து இதனை முறியடித்தே ஆவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு எழும்பியுள்ள சிங்களப் பேரினவாதத்துக்கு துணை சேர்த்துள்ள ஜே.வி.பி. கடந்த காலங்களைப்போலவே இம்முறையும் இறங்கியுள்ளது. ஜே.வி.பி.யின் ஆரம்பத்திலிருந்தே அடக்கப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை கட்சிக்குள் கொண்டிருந்தது. அதற்கு மார்க்சிய விளக்கம் தரப்பட்டது. மலையகத் தமிழர்ளுக்கு எதிரான நிலைப்பாட்டின் போது இந்திய பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் விஸ்தரிப்புவாதத்தின் கருவிகள் என ”மார்க்சிய” விளக்கம் தரப்பட்டது உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும், அதன் பின்னர் இனப்படுகொலைகளைத் தொடர்ந்து ஈழப்போராட்டம் உக்கிரமடையத்தொடங்கியதும் இது அமொpக்க ஏகாதிபத்தியத்தின் வேலையென்றும் உலகைத் துண்டாடி சுரண்டுவதே அவர்களின் புதிய கொள்கை என்றும், அந்த ஏகாதிபத்தியம் ஈழப்போராட்டத்தின் பின்னணியில் இருந்து இயக்குகின்றது என்றும் ”மார்க்சிய” விளக்கம் தரப்பட்டது. 1987இல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் போதும் இந்திய ஊடுறுவல் என்றும் இந்தியா ஈழத்தை தமது புவியியல் பிரதேசத்துக்கு உட்படுத்தி இலங்கையை கைப்பற்றப்போகிறது என்றும் அந்த முதலாளித்துவ எல்லைக்குள் இலங்கையை தள்ளிவிடமுடியாதென்றும் ”மார்க்சிய” வழமையான விளக்கம் தரப்பட்டது. 1987-1989இல் பிரேமதாச காலத்தில் படுபயங்கரமாக ஒடுக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொன்றொழிக்கப்பட்டு கட்சியின் தலைவர் விஜேவீர உட்பட மத்திய குழுவில் (சோமவங்ச அமரசிங்க தவிர்ந்த) அனைவரும் கொல்லப்பட்டு கட்சியிலுள்ள எஞ்சியவர்கள் பூரண தலைமறைவுக்குப் போய் அதன் பின்னர் 1993இல் மீண்டும் பகிரங்கமாக வெளிவந்தனர்.

கட்சிக்குள் பல சந்தர்ப்பங்களில் ஜே.வி.பி. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாகவே பல தடவைகள் பல சக்திகள் வெளியேறியிருக்கின்றனர். 1993இல் ஜே.வி.பி. வெளிவந்த போதும் கட்சிக்குள் இத்தகைய தேசிய இனப்பிரச்சினை குறித்து விவாதம் தொடர்ந்தன. கட்சிக்குள் அது குறித்த விவாத்தை நடத்துவதற்கான ஜனாநாயகம் கூட இலலையென்கிற நிலை வந்ததும் சில குழுக்கள் வெளியேறின. தேசிய இனப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வு என்ன என்கிற கேள்வி எழுப்பப்படுகின்ற போதெல்லாம் வழமையான பாணியில் ”சோசலிசம் வரட்டும்” என்கிற ஒரே சூத்திரத்தை திரும்பச் திரும்பச் சொல்லி கட்சிக்குள் நம்பவைக்க முயன்றதைப் போலவே ஏனையோரையும் நம்பச் செய்யலாம் என்று நம்பினர். இன்னமும் அது குறித்த கொள்கை நிலைப்பாடு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினர். அது 1993இல் சரி ஆனால் ஏழு வருடங்களின் பின்னரும் ”கொள்கை நிலைப்பாடு தயாரிக்கப்படவில்லை” என்கிற வாதத்தை நம்ப எந்த மாங்காய் மடையர்கள் இருக்கிறார்களோ தெரியாது. யுகோஸ்லேவியா தாக்குதலுக்கு எதிராக ஊர்வலம் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்ய கொள்கை நிலைப்பாடான்று உள்ளது. பொஸ்னியாவுக்கு, ஈராக்குக்கு எதிரான யுத்தத்தை எதிர்த்து குரல்கொடுக்க கொள்கை நிலைப்பாடு உள்ளது. தமது சகோதர இன மக்களின் அவலத்தை எதிர்த்து குரல் கொடுக்க ஒன்றும் இல்லையென்பதை யார் நம்பப்போகிறார்கள். குறைந்த பட்சம் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்காகக் கூட குரல் கொடுக்காத ஒரு அமைப்பா அவர்களின் தலைவிதி குறித்து பேசப்போகிறது.

இனிமேலும் மார்சிய மூகமூடிக்குள் இருந்துகொண்டு இப்படி தொடர்வதை விட பகிரங்கமாக தம்மை இனங்காட்டிச் செயற்படுவது குறைந்தது அடுத்த தேர்தலில் போpனவாத வாக்குகளையாவது பொறுக்கிக்கொள்ள ஜே.வி.பி.யால் இயலும். இவ்வளவு காலமும் பாசிசத்துக்கு துணைபோகும் இயக்கமாகத் தான் இருந்து வந்தார்கள். இனி நேரடியாகவே பாசிச இயக்கமாக மாறினாலும் ஆச்சாpயப்படுவதற்கில்லை. அது எப்போதும் போல சிங்கள மக்களின் இயக்கமாகவே இருந்துவிட்டுப்போகட்டும். அடக்கப்படும் சக்திகளுக்கு தமது தலைவிதியை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது தெரியும். நிச்சம் ஜே.வி.பி.யிடம் வந்து தீர்வுகேட்கப்போவதில்லை. நோர்வே தலையீட்டை எதிர்த்து நாடளாவ ஆர்பாட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிற ஜே.வி.பி.க்கு தமிழ் மக்கள் வாழ்த்து தெரிவிக்கட்டும். தமது உரிமைகளுக்கு தாம் தான் இறுதிமட்டும் என்பதில் உறுதி கொள்ளட்டும். தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கட்டும்.

சரிநிகர் 193

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all