Friday, January 30, 2009

பேரினவாதத்தின் நுண்வடிவங்களாக சிங்கள வீரவிதான,ஜாதிக ஜெல உறுமய, சிஹல உறுமய

என்.சரவணன்

மே மாதம் 26ஆம் திகதி ”சிங்கள உருமய” (சிங்கள உரிமை) கட்சி ஆரம்பிக்கப்படுவதையொட்டி தென்னிலங்கையில் பல்வேறு கருத்துக்களும், விவாதங்களும் நடந்துவரும் நிலையில் அதன் முக்கிய பரிமாண வடிவத்தை விளங்கிக் கொள்வது முக்கியமானது.

இதுவரை காலம் இருந்த பேரினவாத வடிவங்கள், அதன் பண்புகள் உள்ளிட்ட அதன் தந்திரோபாயங்கள் அனைத்தும் வரலாற்றுத் திருப்புமுனைக்கு இட்டுச் செல்லுகின்ற ஆபத்துமிக்க மாற்றங்களை அடைந்து வருகின்றது என்பது மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது.

பழையதும் புதியதும்: வேறுபாடு

தென்னிலங்கையில் இயங்கும் இனவாத அமைப்புகளான ”சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷய”, ”மகா சங்கத்தினர்”, ”ஹெல உருமய”, ”ஜாதிக்க சிந்தனய”, ”எக்சத் பிக்கு பெரமுன”, ”தேசப்பிரேமி பிக்கு பெரமுன”, ”மக்கள் ஐக்கிய முன்னணி” மற்றும் பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்த்து இக்கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள வீர விதான இயக்கத்தின் முன்னணி அமைப்பாக பயங்கரவாத தேசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இது அதன் வெகுஜன இயக்கமாக மக்கள் மத்தியில் ஊன்றப்பட்டது. அது போலவே இப்போது அது அரசியல் கட்சியாக வடிவமெடுக்கிறது. ஆனால் இக்கட்சிக்கு கட்டுப்பட்டதல்ல எந்த ஒரு அமைப்பும். தற்பொது கட்டப்படும் கட்சிகூட சிங்கள வீரவிதானவின் முன்னணி தான்.

இத்தகைய பேரினவாத கட்சிகள், அமைப்புகள் வரலாற்றில் பல தடவைகள வந்துபோயுள்ளன. ஆனால் அவை போலல்ல கடந்த நான்கு வருடங்களாக சிங்களப் பேரினவாதம் தன்னை பாசிச வடிவத்துக்கு தயாராக்கிக்கொண்டு வந்துள்ளது.

1. கடந்த காலங்களில் வெறும் உதிரிகளாக இருந்த பல்வேறு அமைப்புகளும் ஒரே அணியில் செயற்பட தொடங்கியுள்ளன.

2. அவை தமக்கென ஒரு உறுதியானதும் ஒருங்கிணைந்ததுமான கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டுள்ளன.

3. பலமும், உறுதியும் மிக்க அமைப்பு வடிவத்தை ஏற்படுத்தியுள்ளன.

4. அதற்கென ஒரு திடமான அரசியலையும் கொண்டிருந்தது. இந்த அரசியலுக்கு ஒரு நிறுவன வடிவம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அது இரகசியமாக செய்து வந்தது. மூன்று வருட கடின பிரயனத்தின் பின் இன்று கட்சியும் வெளிவந்தாகிவிட்டது.

இது குறித்து இதற்கு முன்னரும் சரிநிகரில் எச்சரிக்கப்பட்டிருந்தது. அது நடந்துவிட்டது. இனி அது எடுக்கப்போகும் வடிவம் ஆயுதச் செயற்பாட்டு வடிவம்தான் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். இன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுவரும் கொலைகள், மிரட்டல்கள், வன்முறைகள் என சாதாரண தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுவருவதும், அதே வேளை படையிலிருந்து தப்பியோடிய பலர் இதில் இணைந்த ஆயதப்பயிற்சி வழங்கி வருவது குறித்தும் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இங்கு முக்கியமாக நோக்கத்தக்க விடயமென்னவென்றால் வரலாற்றில் திடீரென தோன்றி, வளர்ந்து, மறைந்த அமைப்புகளைப் போல இது இல்லை என்பது தான். இது நிதானமாகவும், பலமாகவும், பெருமளவு மக்களை ஈர்த்தெடுத்ததும், அம்மக்களை சிதற விடாது ஓரணியில் அரவணைத்துச்செல்லும் அமைப்பாகவும் இது இருக்கிறது. ஆக கடந்த காலங்களில் அரச கட்டமைப்போடு அதிகளவு தொடர்புபடுத்திப் பார்த்த சிங்களப் பேரினவாதம் என்பது இன்று சிவில் சமூகத்தில் மிகவும் ஆழமாக ஊன்றி, பரந்து, விரிந்து பாசிசவடிவமெடுக்கிறது. அரசியல் கட்சி என ஆரம்பித்ததற்கு என்ன இது தற்போதுள்ள முதலாளித்துவ ஜனநாயக அரசியலுக்குள் கூட இருக்கப்போவதில்லை. எதிர்வரும் பொதுத்தேர்தல் தமது செல்வாக்கு குறித்து நாடிபிடித்தறியும் தேர்தலாகவே இருக்கப்போகறது. அதுமட்டுமன்றி பிரதான கட்சிகளுக்கு இது வயிற்றைக் கலக்கும் ஒன்றாக இருக்கப்போகிறது. வேகமாக சிங்கள சிவில் சமூகத்தை பாசிசமயப்படுத்தி வரும் நிலையில் பிரதான தேசியக் கட்சிகளுக்கு ஒன்றில் இந்த பாசிசசக்திகளை விட மோசமாக போpனவாதத்தைக் கடைபிடிக்க வேண்டும். அல்லது பேரினவாதததிலிருந்து மக்களை மீட்டெடுக்கக்கூடிய வகையில் நேரெதிரான பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டும். தேர்தல் அரசியலை இலக்காகக்கொண்ட இக்கட்சிகளுக்கு இரண்டாவது தெரிவானது அவ்வளவு இலகுவாக சாத்தியப்படாது. மேலும் அது தான் இவ்வளவ காலமும் பிரதான கட்சிகளின் அரசியல் வழிமுறையாகவும் இருந்து வந்திருக்கிறது. ஒன்றில் முதலாவதைத் தெரிவு செய்ய வேண்டும் அல்லது ஜே.வி.பி.யின் மீதான அழித்தொழிப்பைப் போல ஒன்றைச் செய்வதன் மூலம் இதனை கட்டுப்படுத்த வேண்டிவரலாம். ஆனால் அதுவும் லேசுப்பட்டதுதல்ல. ஏறாளமான பௌத்த பிக்குகளையும், பௌத்த தலைமைப்பீடத்தையும் கொண்டுள்ள இந்த சக்தியிடம் இனி பிரதான கட்சிகளும் சரணடைய வேண்டிய காலமே இது என்றே கூறலாம். இனி வெறும் அரசாங்கங்களின் கைகளை மட்டுமல்ல அரசினது கையையும் மீறிவிட்ட நிலைமைக்கு முகம்கொடுக்கப் போகிறோம்.

சிங்கள வீரவிதான அமைப்பு 1995 யூலை 07ஆம் தகதி பகிரங்கமாக தன்னை பிரகடனப்படுத்தியது. அதன் முன்னணி அமைப்பான பயங்கரவாத எதிர்ப்பியக்கம் (National Movement Against Terrorism) 1997 இல் பிரகனடப்படுத்தப்பட்ட போதும் அதனை சிங்க வீரவிதானவின் முன்னணி அமைப்பாக அது கூறிக்கொள்ளவில்லை. இந்த NMAT அமைப்பின் தேசிய செயற்திட்டம் (National Plan Of Action Against Terrorism) எனும் பிரகடனத்தை இவ்வமைப்பு 1998 ஜனவரி 14ஆம் திகதி முன் வைத்தது. ஸ்ரீ லங்காவில் எந்தவொரு இயக்கமும் இந்த இயக்கத்தின் செயல்வேகத்தின் முன்னால் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு இயங்கி வருகிறது.

தலைமறைவு இரகசிய வேலை முறைகளைக் கொண்டியங்கும் இந்த அமைப்பின் தேசிய அமைப்பாளராக இருப்பவர் இன்று சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலைமைதாங்குபவராக இருக்கும் முன்னாள் ஜே.வி.பி உறுப்பினரும் , அதன் பின் ஜனத்தா மித்துரோ அமைப்பின் ஆரம்பகர்த்தாவும், முக்கிய பேரினவாத கருத்துருவாக்கத்தில் இன்று பிரதான நபராக இருப்பவருமான சம்பிக்க ரணவக்க தான் இன்று உருவாக்கப்பட்டுள்ள சிங்கள உருமய கட்சியின் தேசிய அமைப்பாளரும்.

கட்சியின் தலைவர் எஸ்.எல்.குணசேகர பிரசித்தி பெற்ற வழக்கறிஞரான எஸ்.எல்.குணசேகர திம்பு பேச்சுவார்த்தையில் (ஐக்கிய (தேசியக் கட்சி) அரசாங்கத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர். இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து அதற்கெதிராக பகிரங்கமாக பிரச்சாரம் செய்து கொண்டு ஐ.தே.க.விலிருந்தும், ஏனைய அரச பதவிகளிலிருந்தும் விலகியவர். தீர்வுப் பொதிக்கு எதிராக ”தீர்வுப்பொதியும், எமனின் பொதியும்” எனும் பல பக்கங்களைக் கொண்ட நூலொன்றையும் (சிங்கள ஆங்கில மொழிகளில்) இன்னும் பல நூல்களையும் எழுதியிருப்பவர்.

தற்போது இராணுவத்தில் உள்ள மேஜர் னெரல் திலக் பரணகம கட்சியின் உப தலைவர்.

கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் திலக் கருணாரத்தன. இந்தக் கட்சியின் தோற்றத்திற்கு இரகசியமாக நீண்டகாலமாக உழைத்து வந்திருப்பவர். இவர் முன்னாள் ஹெல உருமய கட்சியின் தலைவர். இந்த ஹெல உருமய கட்சி 80களில் இறுதியில் தொண்டமான் வடக்கு கிழக்கை 10 வருடங்களுக்கு தமிழரின் நிர்வாகத்திற்கு வழங்கிப் பார்க்கும்படி கூறிய கூற்றைத் தொடர்ந்து எழுந்த கொந்தளிப்போடு உருவாக்கப்பட்டது. சந்திரிகாவின் தம்பியும் இன்று ஐ.தே.க.வின் முக்கிய தலைவருமான அனுரபண்டாரநாயக்கா ஹெலஉருமயவின் இன்னுமொரு தலைவராக இருந்தவர். இருவருமே ஸ்ரீ.ல.சு.க.விலிருந்து ஒன்றுசேர விலகி வந்து ஐ.தே.க.வில் இணைந்து கொண்டவர்கள். ஐ.தே.க.வின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் பதவி ,பாராளுமன்ற உறுப்பினர் பதிவி உட்பட கட்சியின் சகல பொறுப்பிலும் இருந்து விலகி இந்த அமைப்புடன் தன்னை முழுமையாக இணைத்துள்ள திலக் கருணாரத்ன கடந்த 16ஆம் திகதி லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் இப்படி குறிப்பிடுகிறார்.

””...இந்த சம்பிரதாயபூர்வமான நாட்டுக்கு என்ன நேரிட்டலும் பராயில்லை கட்சிகள் எந்த பித்தலாட்டம் பண்ணியாவது பதவியை கைப்பற்றுவதில் தான் குறியா இருக்கின்றன. எதிர்க்கட்சியும் எந்த காட்டிக்கொடுப்பையாவது பண்ணி ஆளுங்கட்சியை பிரட்டத்தான் பார்க்கின்றது.இந்த நிலையில் நாடு அங்கவீனமுற்றுவிட்டுவிட்டது தான் மிச்சம். நீண்ட கால இலக்கைக் கொண்டு ஒன்றும் தீர்மானிக்கப்படுவதில்லை.... அரசாங்கம் பதவியிலிருக்கும், எதிர்க்கட்சி அதனை கவிழ்க்கச் சதி செய்யும், எதிர்க்கட்சி பதியிலமர முயற்சிக்கும் ஆளுங்கட்சி என்ன அக்கிரமத்தைப் பண்ணியாவது அதனைத் தடுக்க முயலும். இந்த நிலைமையில் சிங்ளவர்கள் துண்டாடப்பட்டுள்ளனர்.1951இல் ஸ்ரீ.ல.சு.க. வை பண்டாரநாயக்கா ஆரம்பித்ததன் மூலம் சிங்கள மக்களை முதலாவது தடவை பெரும் பிளவை ஏற்படுத்தினார். டீ.எஸ்.சேனநாயக்கவோ முக்கிய தொழிற்சாலைகளை பரந்தனிலும், வாழைச்சேனையிலும் கொண்டுபோய் நிறுவினார். அதுவும் சிங்களவர்களைத் தான் பாதித்தது. 58ஆம் ஆண்டு மக்கள்மயப்படுத்துவது என்கிற பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியை பழி வாங்கியது. பஸ் உரிமையாளர்களாக அன்று பலர் ஐ.தே.க.வினரே இருந்தனர். இது போல பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்பட்ட சகல மாற்றங்களின் போதும் சிங்களவர்களின் வயிற்றில் தான் அடிக்கப்பட்டது...

மலையக மக்களைப் பாருங்கள் அவர்களுக்கு பிரஜாவுரிமையை பறித்து அனுப்பியிருக்க வேண்டியதில்லை. அவர்களை சிங்களவர்களாக மாற்றுவதன் மூலம் பல பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம். இன்று சுத்தமான ஒரு சிங்களவனும் நாட்டிலில்லை. தற்போதைய ஜனாதிமுறையின் படி சிறுபான்மையினங்களிடம் தங்கியிருப்பதன் விளைவாக அஷ்ரப்களதும், தெர்டமான்களதும் வாக்குகளுக்கு அடிமையாகவேண்டியிருக்கிறது. சிங்களவர்களை ஒன்றுதிரட்டி நீண்டகால இலக்கைக்கொண்ட வேலைத்திட்டத்தை கொண்டு செல்வதே எமது நோக்கம்...”

அது போல சமீபத்தில் சிங்கள வீரவிதானவின் இணைத்தள விலாசம் மாற்றப்பட்டு (http://www.sinhale.org) அதிலேயே ”சிங்கள உருமய” கட்சியின் இணையப்பக்கமும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான தனியான இணையத்தளம் கூடிய விரைவில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள வீரவிதானவின் புதிய சர்வதேசக் கிளைகள் ஜேர்மனியிலும் (ஜேர்மனியில் பேர்லின் மற்றும் மியூனிச் இரண்டு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஜெர்மன் கிளைக்கென தனியான இணையத்தளமும் உள்ளது. (http://www.sinhala.de), லண்டனிலும் அமெரிக்காவிலும், இத்தாலியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த போக்கில் பிரதான கட்சியைச் சேர்ந்த பலர் இதில் இணைந்துள்ளதைப் போலவே அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் பேரினவாதத்திடம் சரணடையும் போக்கையும், சமரசம் செய்துகொள்ளும் சந்தர்ப்பங்களையும் பல்வேறு இடங்களில் காண முடிகிறது. சம்பிக்க ரணவக்க ஏற்கெனவே ”தீர்வுப்பொதியை வலிமையற்றதாக ஆக்கியது நாங்களே” என்று கூட்டங்களில் பேசியது ஞாபகமிருக்கும்.

சில சமீபத்திய நிலைமைகளைக் கவனிப்போம்.

- ”சிங்களவர்களே ஒன்றுபடுங்கள்!” (ஐ.தே.க. எம்.பி. ஜயலத் ஜயவர்தனவின் திவய்ன ஏப்ரல் 9 பேட்டி)

-மகா சங்கத்தினர் ஏற்றுக்கொள்ளும் தீர்வொன்றே வழங்கப்படும். (அதே பத்திரிகையில் புத்த சாசன பிரதி அமைச்சரும், ராமக்ஞ நிகாயவின் பாதுகாப்புச் சபையின் செயலாளருமான எதிரிவீர பிரேமரத்ன.)

-பதில் ஜனாதிபதியாக ஓரிரு நாடக்ள் செயற்பட்ட ரத்னசிறி விக்கிரமநாயக்க, பிரதி சபாநாயகருமான அனில் முனசிங்க இருவரும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரத்னசிறி விக்கிரமநாயக்க லண்டனிலுள்ள சிங்கள இனவாத இயக்கங்களை சந்தித்து உரையாடிவிட்டு ஆறுதல் கூறி வந்திருக்கிறார்.

1997இல் மே 26ம் திகதி அன்று குருநாகல் மாவட்ட ஆளுங் கட்சி பா.உ. ஜயசேன ராஜகருனா சிங்கள ஆணைக்குழுவில் தமிழர்களை கண்டித்து சாட்சியம் அளித்திருந்தார்.

ஐ.தே.கவின் எம்.பியான டாக்டர் ராஜித சேனரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழகியுள்ளது. சேனரத்தன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டு கடற்படை, விமானப்படை, ஆகியவற்றுடன் வியாபார ஒப்பந்தங்களைச் செய்து இருந்தார் என்று குற்றஞ்சாட்டி நீதி அரசமைப்பு விவகார பிரதி அமைச்சர் டிலான் பெரேரா மனு ஒனடறைத் தாக்கல் செய்திருந்தார். திலக் கருணாரத்னவும் ஸ்ரீ.ல.சு.க. காலத்தில் வட கொரியாவுடனான ஆயுதக்கொள்வனவில் இடைத்தரகராக செயற்பட்டிருந்த விடயம் தெரிந்ததே.

அனாகாரிக்க தர்மபாலவின் வாரிசும் இவ்வளவு காலம் ஐ.தே.க.வில் இருந்து தற்போது அரசாங்கத்துடன் இணைந்தவருமான சுசில் முனசிங்கவும் சிங்கள உருமய கட்சியில் இயங்கி வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த 21ஆம் திகதி தென்னிலங்கையில் 232 மில்லியன் ரூபா செலவில் ஒரு ஆயுதத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதாக அரச வானொலிகளில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கம் எதிர்கொண்டு வந்த தொடர்ச்சியான தோல்விகளை சமாளிக்க சிங்கள மக்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் இந்த செய்தியை பேச்சுவார்த்தை முயற்சிகளின் மத்தியிலும் சொல்லவேண்டியதாயிற்று. உள்ளூரிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்யும்படி ஏற்கெனவே பயங்கரவாத ஒழிப்பு தேசிய இயக்கத்தின் செயற்திட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 6ஆம் திகதியன்று கொழும்பில் தேசிய மகா சங்கத்தினர், சிங்கள வீரவிதான, பயங்கரவாத ஒழிப்பு தேசிய இயக்கம், தேசிய ஒருங்கிணைப்புக் குழு ஆகியன கூடி எடுத்த முக்கியமான 7 முடிவுகள் கூர்ந்து கவனிக்கப்படவேண்டியவை. இது பற்றி சம்பிக்க ரணவக்க சண்டே டைம்ஸ் பத்திரிகையில் கும்பகர்ண எனும் பெயரில் எழுதி வரும் பத்தியில் இப்படி குறிப்பிடுகிறார்.

”...மூன்று நிகாயவின் மகாநாயக்கர்களும் ஏனைய அமைப்புகளுடன் சேர்ந்து இந்த முடிவுகளை எடுத்திருப்பது அவர்களின் அரசியல் பொறுப்பை வெளிப்படுத்துகின்றன. அதில் மூன்று அதி முக்கியமான பிரகடனங்கள். அரசாங்கமானது ஒரு கட்டத்தில் போர்நிறுத்தமொன்றை செய்யமாயிருந்தால் அதனை ஏற்க வேண்டாமென படையினருக்கு கட்டளையிடுவதாகவும், அரசாங்கம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பாராளுமன்றத்துக்கோ அல்லது நீதிமன்றத்தக்கோ கட்டுப்டாது ”புரட்சிகரமான வகையில்” நடைமுறைப்படுத்த முயன்றால் மகாசங்கத்தின் மூலம் கட்டளைபிறப்பித்து தலதா மாளிகையில் மகாசங்கத்தினர் கூடி அரசியலமைப்பொன்றை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டுவருவதாகவும், அரசியல் முரண்பாடுகளை மறந்து நாட்டை யுத்த தயாரிப்புடன் எந்நேரமும் தயாராக வைத்துக்கொள்ள உறுதி பூணுவது என்பன முக்கியமான முடிவுகள். முன்னர் அரசாட்சி என்பது அரசு, மகாசங்கத்தினர், மக்கள் என்கிற ”திரிபீடக” முறையில் (முக்கோண வடிவத்தில்) காணப்பட்டது போல இனி செய்தாக வேண்டும்.

சம்பிக்க ரணவக்க தனது பத்தியில் அவசர நிலைமையொன்றில் ஆட்சியை கவிழ்த்து புதிய ஆட்சியை நிறுவும் உரிமை மகாசங்கத்தினருக்கு இருக்கிறது எனும் சராம்சப்பட முடித்திருந்தார். உண்மையில் இந்த நிலைமை ஒரு பாசிசத்தயாரிபுகள். மதம் மக்கள் மத்தியில் வகிக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி மதத்தின் பெயரால், கற்பிதம் செய்யப்பட்ட புனிதத்தின் பெயரால், புனையப்பட்டுள்ள இனத்தூய்மையின் பெயரால் இதனை செய்வதே சிங்கள பௌத்த நவ பாசிச வடிவத்தின் யுத்த தந்திரபோயமாக இருக்கிறது என்பது கொஞ்சம் கொஞச்மாக வெளித்தெரிந்துகொண்டிருக்கிறது.

ஆனையிரவு வீழ்ச்சி ஏற்கெனவே படையினரை வெறிகொள்ள வைத்திருக்கிறது போலவே பேரினவாதமயப்படுத்தப்பட்டு வரும் மக்கள் மத்தியிலும் சீற்றத்தை உண்டுபண்ணியிருப்பதானது தமிழ் மக்கள் மத்தியில் பதட்டத்தையும், பீதியியையும் கிளப்பியுள்ளது. எந்தநேரத்திலும் ஒரு இனஅழிப்பு சிவில் சமூகத்திலிருந்தே எழலாம் என்கிற நிலையை உணரக்கூடியதாக இருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் அது 1983 போல இருக்காது. ஏனெனில் அப்போது அதற்கு பின்னணியில் தலைமை தாங்கியது ஒரு கட்சி, அதனை சாதகமாகப் பயன்படுத்தியது காடையர் கூட்டம். இன்று அப்படி அல்ல ஏனெனில் சிவில் சமூகம் தன்னிச்சையாக எழக்கூடிய சூழலானது பெரும் அழிவைத்தரத்தக்க ஆபத்துமிக்கப் போக்கு.

தமிழ் மக்கள் சேர்ந்து வாழும் சந்தர்ப்பத்துக்கான அறிகுறிகள் அற்றுபோய்கொண்டிருக்கிற நிலையில் தமக்கான தேசத்தை நிறுவுவது என்பது தவிர்க்கஇயலாத வகையில் தள்ளப்பட்டுக்கொண்டே போகின்றனர். எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது தவிர்க்கமுடியாது.

0 comments:

தளத்தின் உள்ளடக்கம்.

இந்தத் தளத்தில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உருவாக்கம், விரிவாக்கம், கருத்தாக்கம், அதன் வடிவம், அதன் நிறுவனமயமாக்கம், அதன் திசைவழி குறித்து சரிநகர், ஆதவன், நிகரி, விடிவு, பறை, இனி போன்ற பதிப்புகளில் வெளிவந்த என்.சரவணனின் கட்டுரைகள் மறுபிரதியிடப்படுகின்றன.

சுவடி

Template by - Abdul Munir - 2008 - layout4all